மௌனக்காதலன்

அன்பே! ஆருயிரே! தேவதையே!
இப்படியெல்லாம் நான் உன்னிடம் சொன்னதில்லை..
ஏன்? எந்த ஒன்றிற்கும் உவமையாக்கி
உன்னை நான் புகழ்ந்ததுமில்லை...
அப்படி எல்லாம் உன்னிடம் நான் சொல்லி இருந்தால்..
நான் உன்னை காதலிப்பது உன் அழகிற்காகத்தான் என்றாகிவிடும்!!
நான் மறுக்கப்போவதில்லை...
உன் அழகும் ஒரு காரணம்தான் நான் உன்னை காதலிப்பதற்கு!!
ஆனால் அழகே காரணம் அல்ல!!!
நான் வார்த்தைகளில் வெளிப்படுத்தாத உன் அழகின் அழகை
மௌனமாக என்னுள் ரசித்துக் கொண்டுதான் இருக்கிறேன்...
அன்பே! ஒரு வார்த்தை சொல்..
அந்த வானத்து நட்சத்திரங்களையும் கோர்த்துக் கொடுப்பேன்
உன் கூந்தலுக்கு பூச்சரமாக...
அந்த வெள்ளி நிலவினையும் கிள்ளிக் கொடுப்பேன்
உன் விரல்களுக்கு நகங்களாக...
அந்த சுட்டுப் பார்க்கும் சூரியனையும் உதிர்த்துக் கொடுப்பேன்
உன் நெற்றிக்கு திலகமாக...
அந்த நிலையில்லா வானவில்லையும் நிரந்தரம் ஆக்குவேன்
உன் இரு புருவங்களாக...
அந்த அந்தி மஞ்சள் வானத்தையும் வீழ்த்திக் கொடுப்பேன்
உன் உடலுக்கு போர்வையாக!!!
இப்படியெல்லாம் சொல்லி...
என் நிஜக் காதலை
இந்த கற்பனையான ஜரிகை வார்த்தைகளில் புதைத்துவிட எனக்கு விருப்பம் இல்லை!!
எனென்றால்...
காதலுக்கு விளக்கம் சொன்னவர்கள் கூட
காதலிப்பதற்கு காரணம் சொன்னதில்லை!!
என்றாவது ஒரு நாள் நிச்சயம் உன் கைப்பிடிப்பேன்...
அதுவரையில் மௌனமாகவே காதலிப்பேன் உன்னை!!!